மீள்புதுப்பிக்கத்தக்க சக்திப் பூங்கா அல்லது “சக்திப் பூங்கா” என்பது பரிணமித்து வரும் கருத்தியலாகும். இதன் வரைவிலக்கமானது இன்னும் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பதுடன் பெருமளவில் காற்றின் சக்தி மற்றும் சூரிய சக்திப் பிறப்பாக்கம் போன்ற தூய சக்தி உருவாக்க நோக்கத்திற்காக இது பயன்படுத்தப்பட்டு திட்டமிடப்பட்டு வரும் பரப்பாகும். இந்த மீள்புதுப்பிக்கத்தக்க உட்கட்டமைப்பினால் மிகையான கைத்தொழில் சொத்தினைக் கொண்டுள்ள பரப்புக்களுக்கான ஸ்மார்ட்டான மற்றும் நீடுறுதியான சொத்துக்களாகச் செயற்படமுடியும். மீள்புதுப்பிக்கத்தக்க சக்திப் பூங்காக்கள் நம்பியிருக்கக்கூடிய ஒரு மூலத்தினையும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தூய சக்தியினையும் மாத்திரம் வழங்காது சூழியல் சுற்றுலாத்துறைக்கும் பங்களிப்பு வழங்குகின்றது. அத்துடன் உள்ளூர்ப் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வியாபாரக் குழுக்கள் போன்றவற்றிற்கு கல்வி வளமாகவும் செயற்படுகின்றது.

கடந்த காலத்தில் சக்தித் தளங்கள் மின்சாரத்தினைப் பிறப்பிக்கின்ற நிலக்கரி அல்லது எரிவாயு ஆலைகளுடன் ஒற்றைப் பரிமாணம் கொண்டவையாகக் காணப்பட்டன. ஆனால் இன்றுள்ள சக்திப் பூங்காக்கள் தொழில்நுட்பங்களினதும் நோக்கங்களினதும் கலப்பினை ஒருங்கிணைக்கக்கூடியவையாகும். உதாரணமாக மின்பிறப்பாக்கம் சூரிய சக்தியில் இருந்து, காற்றிலிருந்து, உயிரியப் பொருண்மையிலிருந்து, பூகோள வெப்பத்திலிருந்து, அணுசக்தியிலிருந்து, தூய சுவட்டு எரிபொருளில் இருந்து அல்லது ஐதரசன் உருவாக்கத்தில் இருந்து வரலாம்.

இலங்கையில் காற்று மற்றும் சூரிய சக்தி உருவாக்கத்தினைத் துரிதப்படுத்துவதற்கான ஒரு மாற்று உபாயமார்க்கமாகவே சக்திப் பூங்கா எனும் கருத்தியல் முன்மொழியப்பட்டது. சக்திப் பூங்கா அரச – தனியார் பங்காண்மை எனும் வடிவில் செயற்படுகின்றது. சக்திப் பூங்காக்களின் பிரதான நோக்கம் உச்சபட்ச பொருளாதார வினைத்திறனுடன் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி உருவாக்கத்திற்கான முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதாகும்.

தற்போது காற்று மற்றும் சூரிய சக்தி உருவாக்கத்தில் தனியார் துறையின் ஈடுபாடு சார்பளவில் மந்தகதியிலான முன்னேற்றத்தினையே காட்டுகின்றது. மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி உருவாக்குநர்கள் எதிர்நோக்கும் பிரதான சவால் கருத்திட்ட மூலதனச் செலவுகள் ஒப்பீட்டளவில் குறிப்பிட்ட செலவுகள் தொடர்பில் (USD/kW) உயர்வானவையாகக் காணப்படுகின்றமையாகும். இந்த ஏற்றத்தாழ்விற்கான பிரதான காரணங்கள்:

  • பெருமளவு உற்பத்தியினால் உற்பத்திச் செலவு குறையும் விளைவு - 50 – 100 மெகாவாற் எனும் தற்போதைய உலகளாவிய கருத்திட்ட ஆற்றல்களுடன் ஒப்பிடுகையில் 10 மெகாவாற் கருத்திட்டங்கள்
  • போட்டித்தன்மை மிக்க விலைமனுக்களுக்கான விஸ்தீரணம் இல்லாமை – முன்னணி உபகரண விநியோகத்தர்கள் சிறிய அளவிலான கருத்திட்டங்களுக்கு விலை மனுக்களைச் சமர்ப்பிக்கத் தயங்குகின்றனர்
  • MW- வகுப்புக் கருத்திட்டங்களுக்கான உபகரணங்கள், குறிப்பாகக் காற்று டேர்பைன்களை உயர்த்துவதுடனும் நகர்த்துவதுடனும் தொடர்புடைய போதிய பொறியியில் உட்கட்டமைப்பு இல்லாமை. இக்காரணத்தினால் கணிசமான மேலதிகச் செலவுடன் இவ்வாறான உபகரணங்களை வெளிநாட்டில் இருந்து வாடகைக்குப் பெறும் நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.
  • வேறாக ஒதுக்கப்பட்ட மின்சக்திப் பரிமாற்ற லைனினை உருவாக்கும் செலவினை ஏற்கவேண்டிய தேவை.

 

மின்சாரச் செலவினைக் குறைத்து, மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் நிதிரீதியாக உறுதிமிக்க சக்தி மூலமாக உருவாகுவதை இயலுமாக்குவதற்கு நேரடியாக அல்லது மறைமுகமாகப் பங்களிப்பு வழங்கக்கூடிய நடவடிக்கைகளைச் சக்திப் பூங்கா உபாயமார்க்கத்தின் பிரதான கூறுகள் கொண்டுள்ளன.

  • தற்போது கருத்திட்டம் ஒன்றிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 10 மெகாவாற் ஆற்றலில் இருந்து 75 முதல் 100 மெகாவற் வரையான ஆற்றலைக் கொண்ட கருத்திட்டத்திற்கு காற்று மற்றும் சூரிய சக்திக் கருத்திட்டங்களின் அளவினை அதிகரிப்பது ஒரு நடவடிக்கையாகும். பின்வரும் காரணங்களினால் இந்த அளவிலான கருத்திட்டமானது மூலதனச் செலவினைக் குறைப்பதற்கான அதிக சாத்தியத்தினைக் கொண்டுள்ளது:

    • உற்பத்தி அதிகரிக்கையில் உற்பத்திச் செலவு குறையும் விளைவு
    • உபகரண விநியோகத்தர்களின் மத்தியில் அதிகரித்த போட்டி
    • மின்சாரத்தினைப் பிறப்பிக்கத் தேவையான ஏனைய ஆக்கக்கூறுகளினதும் துணைநிலை ஆக்கக்கூறுகளினதும் விகிதாசார ரீதியிலான குறைந்த செலவுகள்

 

  • குறிப்பிட்ட மனிதவலு மற்றும் உதிரிப்பாக இருப்புக்கள் குறைவான மட்டத்தில் பேணப்படவேண்டிய தேவை காணப்படுவதால் இயக்கச் செலவிலும் பராமரிப்புச் செலவிலும் ஏற்படும் குறைவு
  • பாரிய காற்றுச் சக்திக் கருத்திட்டங்கள் பொதுவாக அதிகமான உள்நாட்டுக் கம்பனிகள் மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலதன ஆற்றலுக்கு அப்பாற்பட்டவையாகும். எனவே காற்றுச் சக்தியினை உருவாக்கப் பொருத்தமானது எனக் கருதப்படும் குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்தில் அமைந்துள்ள சக்திப் பூங்காவினை மையப்படுத்தி பல உள்நாட்டுத் தனியார் கம்பனிகளுடனும் எம்முடனும் உரிமை முதல் பங்காளர்கள் என்கின்ற ரீதியில் இலங்கை மின்சார சபையுடனும் சட்ட ரீதியான அமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் (SPV) அல்லது கூட்டு முயற்சி முன்னெடுப்பு உருவாக்கப்படவேண்டும் என முன்மொழியப்படுகின்றது.
  • டென்மார்க், ஜேர்மனி மற்றும் நோர்வே போன்ற பல ஐரோப்பிய நாடுகள் வளர்முக நாடுகளின் கருத்திட்டங்களுக்காகக் குறைந்த வட்டியினை அல்லது குறைந்த வட்டிக் கடனினை (கலப்புக் கடன் என அழைக்கப்படுவது) வழங்குகின்றன.  கடன் பெறுகின்ற நாடுகளுக்கு இவை முக்கியமாகும் என்பதுடன் சாதாரன வர்த்தக விதிகளின் கீழ் நிதி ரீதியாகச் சாத்தியமற்றதாகும். எவ்வாறாயினும் இவை பிணைக்கப்பட்ட உதவித் திட்டங்களாகும். இதில் பண்டங்களுக்கும் சேவைகளுக்கும் கொடையாளர் நாடுகளே கட்டாயம் நிதியுதவி வழங்கவேண்டும்.
  • சட்ட ரீதியான அமைப்பின் அரசாங்கப் பங்காளர் கருத்திட்ட அணித் தலைவராகச் செயற்படுவார் என்பதுடன் பின்வரும் பிரதான செயற்பாடுகளைப் பொறுப்பேற்பார்:
    • குறிப்பிட்ட சக்தி வளத்திற்கான உசாவல் தரவுகளையும் களத்திற்கென்று தனித்துவமான தரவுகளையும் சேகரித்தல்
    • உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு விநியோகிக்கப்படும் நீண்ட கால மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி முறி உள்ளடங்கலாக மென் நிதியிடலைக் கோருதல்
    • காணி அளவீடு, காணி கொள்ளல் மற்றும் இவற்றுடன் தொடர்புடைய ஒப்படைக்கும் பணிகள்
    • ரயில் பாதைகள், வீதிகள் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட உள்ளூர் உட்கட்டமைப்பு அபிவிருத்தி
    • HV பரிமாற்றத்தின் நீட்டிப்பு / வலுப்படுத்தல்
    • மின் வலையமைப்பு உப நிலைய ஆற்றலைச் சேர்த்தல் / அதிகரித்தல்
    • அரச முகவர்களிடமிருந்தான அங்கீகாரமும் சுற்றாடல் ரீதியான அங்கீகாரமும்

 

சக்திப் பூங்காக்களின் நன்மைகள்

சக்திப் பூங்கா என்பது ‘சக்திச் சூழியல் முறைமையாகும்’. இதில் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான தொடர்பு ஒருவரில் ஒருவர் தங்கியுள்ள தொடர்பாகும். ஒருவர் மற்றவரின் கழிவு உற்பத்தியில் இருந்து பயன்பெறுவதால் பூங்காவின் பயனாளர்கள் அவர்களின் சொந்தச் சக்தித் தேவைப்பாடுகளைக் குறைத்துக் கொள்கின்றனர். அவர்கள் பயன்படுத்தும் சக்தி உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால் பரிமாற்ற இழப்புக்கள் அகற்றப்படுகின்றன. மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி சுவட்டு எரிபொருளுக்கான தேவையினை அகற்றுகின்றது.

பன்முகப்படுத்தல் மற்றும் இணை அமைவிட உருவாக்கம் மூலமாக சக்திப் பூங்கா பொருளாதார ரீதியாக மற்றும் சுற்றாடல் ரீதியாக நீடுறுதியான எதிர்காலத்திற்கான அடிப்படையினை வழங்குகின்றது.

சக்திப் பூங்கா ஒன்றின் பிரதான நன்மைகள் பின்வருவனவாகும்:

  • மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியினை அடிப்படையாகக் கொண்ட மின் பிறப்பாக்கத்தின் குறைக்கப்பட்ட செலவு
  • சிறந்த மின்வலையமைப்பு ஒருங்கிணைப்பு
  • மீள்புதுப்பிக்கத்தக்க சக்திக் கருத்திட்டங்களின் உரித்தாண்மையின் பரந்த அடிப்படை
  • தேசிய மின்சாரத் தொழிற்துறையில் மையநீரோட்டமாக்கப்பட்ட மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி
  • கருத்திட்டங்களை மக்கள் ஏற்றுக்கொள்வதில் மேம்பாடு
  • மீள்புதுப்பிக்கத்தக்க சக்திக்கான சாதகமான முதலீட்டுச் சூழல்

 

100 MW காற்றுப் பூங்கா - மன்னார்த் தீவு

இலங்கையில் காற்றின் சக்தியினைப் பயன்படுத்தும் நடைமுறை 1990 களில் ஆரம்பித்துள்ளது. இக்காலப்பகுதியில் தேசிய மின்சார வலையமைப்புடன் இணைக்கப்பட்ட முதலாவது கருத்திட்டம் இலங்கை மின்சார சபையினால் அம்பாந்தோட்டையில் அமுல்படுத்தப்பட்டது. இந்தக் கருத்திட்டம் 3 மெகாவற் ஆற்றலுடன் 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை இயங்கிவந்தது.  

சிறிய நீர்மின்சார முன்னெடுப்புக்களுடன் சேர்த்து காற்றின் சக்தியினால் மின்சாரம் உருவாக்குவதற்கு அரசாங்கம் தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கியுள்ளது. மீள்விற்பனைக்காக வேறு ஓர் உற்பத்தியாளரிடம் இருந்து உற்பத்தியினைப் பெற்றுக்கொள்ளும் கோட்பாட்டுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட காப்பு வரியினை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும் தனியார் கருத்திட்டங்கள் எவையும் சாத்தியமாகவில்லை. இதற்கான காரணம் மேற்குறிப்பிட்ட சூத்திரக் கோட்பாடு காற்றினைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் சகல கருத்திட்டங்களையும் நிதி ரீதியாகக் கிடைக்காதவையாக ஆக்கிவிட்டது.

25000 மெகாவற் மின்சக்தியினை உருவாக்கும் ஆற்றல் கொண்ட விருத்திசெய்யக்கூடிய காற்று வளங்களை இலங்கை கொண்டுள்ளது என்பதை அமெரிக்காவின் தேசிய மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி ஆய்வுகூடம் (NREL) நடத்திய காற்று வளங்கள் பற்றிய செய்மதி அடிப்படையிலான கணிப்பீடு எடுத்துக்காட்டியுள்ளது. விருத்திசெய்யக்கூடிய பிரதேசங்களில் சுமார் 2500 மெகாவற் ஆற்றலுக்கான சிறந்த தரத்திலான காற்று வளங்கள் உள்ளன என இதே ஆய்வு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த எண்ணிக்கைகளை நாட்டின் தேசிய மின்சாரக் கிராக்கியின் கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டும். நாட்டின் கேள்வியானது இன்று 2600 மெகாவற்றாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கமைய, சக்தியினைக் களஞ்சியப்படுத்துவதில் எவ்வித அர்த்தபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காவிட்டால், நாட்டில் கிடைக்கக்கூடியதாகவுள்ள அபரிமிதமான காற்று வளமானது எதிர்வுகூறக்கூடிய எதிர்காலத்தில் கணிசமான அளவுகளில் பயன்படுத்தப்படமாட்டாது. எவ்வாறாயினும் இலங்கையின் தேசிய சக்திக் கொள்கை மற்றும் உபாயமார்க்கங்களில் புதிய மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களிற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கொள்கை இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு காற்றின் சக்தி ஒரு முக்கியமான வகிபாத்திரத்தினை வகிக்கும். பின்புலத்தில் சுருக்கமாக விபரிக்கப்பட்டுள்ளவாறு இலங்கை மிகச் சிறந்த காற்று வளத்தினைக் கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இது NREL இனால் தயாரிக்கப்பட்ட இலங்கை மற்றும் மாலைதீவிற்கான காற்றுச் சக்தி வளங்கள் வரைபடத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த முயற்சி இலங்கை மின்சார சபையின் கள அளவீட்டு நிகழ்ச்சித்திட்டத்தினை வலுப்படுத்தியதுடன் நாட்டில் கிடைக்கக்கூடியதாகவுள்ள காற்று வளங்களை அளவிடுவதற்கு நாடு தழுவிய கள அளவீட்டினைப் பொறுப்பேற்க எம்மை ஊக்குவித்தது. இந்த முயற்சியின் விளைவாக பிரதானமாகப் புத்தளப் பிராந்தியத்தில் 128 மெகாவற் காற்று மின்சக்திக் கருத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.  

எவ்வாறாயினும் தனியார் துறையினால் உருவாக்கப்பட்டுள்ள இக்கருத்திட்டங்கள் 10 மெகாவற் எனும் ஆற்றல் வரையறையினைக் கொண்டுள்ளதுடன் மலிவாக மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கு இட்டுச் செல்லும் உற்பத்தி அதிகரிக்கையில் உற்பத்திச் செலவு குறைவடைகின்ற விளைவு அற்றதாகவும் உள்ளது. இந்தக் கருத்திட்டங்களை 100 மெகாவற் எனும் தனித்த காற்றுப் பூங்காவாக ஒன்றுசேர்க்க முடியுமாக இருந்தால் குறைக்கப்பட்ட காணிப் பாவனை அழுத்தத்துடன் உற்பத்திச் செலவு குறைவடையும் நன்மைகளையும் அடைந்து கொள்ள முடியும்.  

இக்கருத்திட்டமானது இலங்கையில் காற்றின் மூலம் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கான எதிர்காலப் பாதையினை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றது. தற்போது காற்றின் சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் கருத்திட்டங்கள் தனியார் துறையினாலேயே முன்னெடுக்கப்படுகின்றன. கருத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் வளங்களில் அதிகமானவை அரசிற்குச் சொந்தமானவையாக இருந்தபோதிலும் இக்கருத்திட்டங்களில் அரச துறை நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட வகிபாத்திரத்தினையே கொண்டுள்ளன. காற்றின் சக்திக் கருத்திட்டத்திற்கான உள்ளீடுகள் குடியரசிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளd (அதாவது: காற்று மற்றும் காணி வளங்கள்). இதேபோன்று வெளியீட்டிற்கான சந்தையும் அரசிற்குச் சொந்தமான நிறுவனமான இலங்கை மின்சார சபையினால் கட்டுப்படுத்தப்படுகின்றது (அதாவது: உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின்சார சபையினாலேயே வாங்கப்படுகின்றது). இலங்கை மின்சார சபையே மின்சாரத்தினை வாங்குவதற்கு சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரேயொரு நிறுவனமாகும்.  

சார்பளவிலே சிறிய நாடாக இருக்கும் இலங்கை காணிப் பாவனை மீது பாரிய அழுத்தங்களைக் கொண்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் காற்று மின்சாரக் கருத்திட்டங்கள் பரவலாக இடம்பெறுவதற்கு அனுமதி வழங்க முடியாத நிலை இருக்கின்ற போதிலும் காணப்படும் வளத்தின் சாத்தியமானது கருத்திட்டம் பரவுவதை ஊக்குவிக்கலாம்.

இலங்கை மின்சார சபையினால் அமுல்படுத்தப்படும் உத்தேச கருத்திட்டம் அதன் செயற்பாட்டுக் காலம் முழுவதும் 400GWh தூய சக்தியினை வருடாந்தம் வழங்கும். இது இன்றைய மின்சாரக் கேள்வியில் சுமார் 3 சத விகிதமாகும். நாட்டில் இதுவரை பயன்படுத்தப்படாத இயற்கை வளமாக இருக்கின்ற காரணத்தினால், மலிவான சுவட்டு எரிபொருள் தெரிவு மூலமாக விநியோகிக்கப்படும் சக்தியினை பதிலீடு செய்வதற்கு ஆகும் செலவினைக் கருத்திற்கொள்கையில் காற்றுடன் தொடர்புடைய மின்சாரம் மொத்தத் தேசிய உற்பத்திக்கு கணிசமான பங்களிப்பினை வழங்கும். காற்றின் மூலம் பிறப்பிக்கப்படும் மின்சாரத்திற்கான செலவு குறைவாக இருக்கையில் அது இலங்கை மின்சார சபையின் திட்டமிடல் செயன்முறையில் காற்றின் மூலமான மின்சாரத்தினை மையநீரோட்டமாக்குவதற்கு வழிவகுக்கும்.

சகல சக்தித் துறைகளும் மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்புடன் செயற்படுவதற்காக ஒன்றுசேர்க்கும் தளத்தினை வழங்குவதன் மூலம் கருத்திட்டமானது மின்சக்தித் துறையில் முதலீட்டுத் தளத்தினையும் வலுப்படுத்தும்.

கருத்திட்டமானது குறைவாக அபிவிருத்தி அடைந்த பிராந்தியங்களுக்கு  மிகவும் தேவைப்படும் முதலீட்டினைக் கவர்ந்திழுக்கும் என்பதுடன் மேம்படுத்தப்பட்ட மின்சார விநியோகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட வீதிகள் மூலம் பிரதேசத்தின் உட்கட்டமைப்பினையும் மேம்படுத்தும். இக்கருத்திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகளைத் தவிர பிரதேசத்தின் மக்களுக்கு முன்னுரிமையாகத் தொழில்வாய்ப்பும் வழங்கப்படும்.

 

100 MW சூரியப் பூங்கா - சியம்பலாண்டுவ, மொனராகல

எதிர்காலத்தில் நிகழவுள்ள சக்தி நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்கு சூரிய சக்தியே மிகவும் நம்பிக்கை தருகின்ற சக்தி வளமாகும். சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தினை உற்பத்தி செய்வது 2000ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இருந்தே இடம்பெற்றுள்ளது. இக்காலப்பகுதியில் மின்சார வலையமைப்புடன் இணைக்கும் முதலாவது கருத்திட்டம் தனியார் துறையினால் அமுல்படுத்தப்பட்டது. மீள்விற்பனைக்காக வேறு ஓர் உற்பத்தியாளரிடம் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தினைப் பெற்றுக்கொள்ளும் காப்பு வரிக் கோட்பாட்டுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட தெரிந்த NRE காப்புவரிகளுக்கு மத்தியில் ‘ஏனையவை’ எனத் தலைப்பிடப்பட்ட வகையின் மூலம் தனியார் துறையினருக்காக அரசாங்கம் சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் பிறப்பிப்பதற்கு அனுமதி வழங்கியது. எவ்வாறாயினும்  தனியார் கருத்திட்டங்கள் எவையும் சாத்தியமாகவில்லை. இதற்கான காரணம் மேற்குறிப்பிட்ட சூத்திரக் கோட்பாடு காற்றினைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் சகல கருத்திட்டங்களையும் நிதி ரீதியாகக் கிடைக்காதவையாக ஆக்கிவிட்டது.

எம்மால் தயாரிக்கப்பட்ட சூரிய வள வரைபடம் நாட்டின் அபிவிருத்தி் செய்யப்படக்கூடிய இடங்களில் பரந்த அளவில் சிறந்த தரத்திலான சூரிய வளங்கள் பெருமளவில் அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. இலங்கை அபரிமிதமான சூரிய வளங்களினால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.   

சியம்பலாண்டுவயில் 100 மெகாவற் சூரியப் பூங்காவினை அமைப்பதற்கு அனுமதி வழங்குவதற்கான இந்த முன்னெடுப்பின் மூலம் விவசாயத்திற்கோ அல்லது வேறு பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கோ பொருத்தமற்ற தரிசு நிலங்களைச் சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தினைப் பிறப்பிக்கப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கமைய முதலாவது 100 மெகாவற் சூரியப் பூங்காவினை சியம்பலாண்டுவயில் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படும். கருத்திட்டத்தினை நாமும் இலங்கை மின்சார சபையும் கூட்டாக அமுல்படுத்துவோம்.

கருத்திட்டமானது அதன் செயற்பாட்டுக் காலப்பகுதியின் போது 200GWh தூய சக்தியினைப் பிறப்பிக்கும் என மதிப்பிடப்படுகின்றது. இக்கருத்திட்டமானது போட்டிமிக்க கட்டணங்களில் தொழில்நுட்ப எல்லைகளின் உயர் தரத்திலான முதலீட்டாளர்களைக் கவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

காற்று மற்றும் சூரிய சக்திப் பூங்கா - பூநகரி வளைகுடா

பூநகரி வளைகுடாவில் காற்று மற்றும் சூரிய சக்திப் பூங்காக்களை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 240 மெகாவற் மின்சாரப் பிறப்பாக்கத்திற்கு காற்று உதவும் என மதிப்பிடப்படுகின்றது. அதேவேளை சூரிய சக்தியானது 150 – 200 மெகாவற் ஆற்றலுடைய மின்சாரப் பிறப்பாக்கத்திற்கு உதவும் என மதிப்பிடப்படுகின்றது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

call to action icon